அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு!!
வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர்.
அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய இடத்தில் வேலைவாங்கி தருவதாக ஆசைகாட்டி சிலர் அழைத்து சென்று விட்டதாக அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள ஆள்கடத்தல் (தடுப்பு) பிரிவு போலீசாரை தொடர்பு கொண்ட அசாம் போலீசார், அந்த வேலை வாய்ப்பு ஏஜெண்ட்டின் டெல்லி முகவரியை அளித்திருந்தனர்.
அந்த முகவரிக்கு சென்று டெல்லி போலீசார் விசாரித்தபோது, அங்கிருந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டு அந்த ஏஜெண்ட் வேறு இடத்துக்கு போய்விட்டதாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய அலுவலகத்தை தேடி கண்டுபிடித்த போலீசார், டெல்லியில் உள்ள வெஸ்ட் என்கிளேவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த அந்த சிறுமியை மீட்டு, சிறுமியர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
அந்த சிறுமி மீட்கப்பட்ட தகவல் அசாம் போலீசார் மூலமாக குவஹாத்தியில் வசிக்கும் அவளது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating