கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!
கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள கோர்ட் வளாக கட்டிடத்தின் உச்சியின் மீது ஏறி நின்ற மனநோயாளி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டிடத்தில் இருந்து அடுத்த கட்டிடத்துக்கு ஆபத்தான முறையில் தாவிக்கொண்டிருந்த அவரை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டதால் இச்சம்பவம் பற்றி உள்ளூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையை சேர்ந்த மீட்புப் படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவரை சமாதானப்படுத்தி, கீழே அழைத்துவரும் நோக்கில் மேலே ஏறிச்செல்ல முயன்ற போலீசார் மீது அந்த மனநோயாளி கற்களை தூக்கி வீச தொடங்கினார்.
எனினும், மீட்புப் படையினர் அவரை சாதுரியமாக சுற்றிவளைத்துப் பிடித்து, கீழே அழைத்து வந்தனர். அவரை நீதிபதியின் முன் ஆஜர்படுத்திய போலீசார், மனநல மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றனர். இந்தி மட்டும் பேசும் அந்த நபர் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
Average Rating