தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!
வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலை மற்றும் எல்லைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். சாராயம் காய்ச்சும் இடம் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும். மலை மற்றும் எல்லைப்பகுதி கிராமங்களில் சாராயம் பொட்டலம் ரூ.25, ரூ.50–க்கு விற்கப்படுகிறது.
கிராம பகுதியை தொடர்ந்து நகர் பகுதிகளிலும் சாராய விற்பனை சூடு பிடித்துள்ளது. சாராய புழக்கத்தை முற்றிலும் ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சாராய பொட்டலங்களை விற்கும் பெண்கள் உள்ளிட்ட வியாபாரிகளே சிக்குகின்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியும் பயனில்லை. இதனால் போலீசாருக்கு சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. சாராயம் காய்ச்சும் கும்பல் பெரும்பாலும் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகள், மலையின் மையப்பகுதியை தங்கள் வசமாக்கி கொள்வதுண்டு. நாட்டு துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் கொண்டு கண்காணிப்பர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கத்தை அடியோடு ஒழிக்க மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 40 போலீசார், தமிழக – ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் ஆந்திர மாநில போலீசார் 30 பேரும் இணைந்து சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். அல்லேரி மலைப்பகுதியில் நடத்தப்பட்ட வேட்டையில் சாராயம் காய்ச்சிய பயங்கர கும்பல் தப்பியோடியது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1500 லிட்டர் சாராய ஊரல், 500 லிட்டர் சாராயத்தை போலீசார் அழித்தனர்.
இதையடுத்து வாணியம்பாடியில் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாதகடப்பா மலை அடர்ந்த வனப்பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating