காட்பாடி ரெயில் பாதையில் 6 மாதத்தில் 32 பேர் பலி: தண்டவாளத்தை நடந்து கடப்பதால் அதிக உயிரிழப்பு!!
ஆபத்து என தெரிந்தும் தவறான செயல்களை பொதுமக்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
தண்டவாளத்தை நடந்து கடக்க வேண்டாம். ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம் என்று ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் எவ்வளவோ எச்சரித்தும் அந்த செயல்களை செய்து வரும் மக்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் மக்கள் அதை கண்டு கொள்வதாக இல்லை.
காட்பாடி ரெயில் நிலையம் பல ஊர் மக்கள் பயன்படுத்தும் ரெயில் நிலையமாக உள்ளது. தினமும் ஏராளமான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
தண்டவாளத்தை நடந்து கடக்க வேண்டாம் என்று எத்தனை முறை எச்சரித்தாலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை நடந்து கடக்கும் பயணிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.
சிலர் ரெயில் வரும் நேரத்திலும் தண்டவாளத்தை கடக்கிறார்கள். இப்படி தண்டவாளத்தை கடந்த பலர் தங்கள் உயிரை இழந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
கடந்த மாதம் 24–ந் தேதி திருவலத்தில் அடகு கடை வைத்திருக்கும் பஜன்லால் என்பவர் திருவலம்–முகுந்தராயபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தார்.
கடந்த மாதம் 25–ந் தேதி முகுந்தராயபுரம் ரெயில் நிலையம் அருகே திருவண்ணாமலை ஊத்துக்குட்டையை சேர்ந்த தச்சு தொழிலாளி மணி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தார்.
கடந்த 2–ந் தேதி காலை வேலூர் சேண்பாக்கம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தார். இப்படி அறிவுரைகளை கேளாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்–டிவிசனில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 32 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தண்டவாளத்தை நடந்து கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானவர்கள்தான் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது தவிர தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்பவர்களும், ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்பவர்களும் இதில் அடங்குவர். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கலையரசி என்ற இளம்பெண் தனது காதலனுடன் ரெயில் முன்பு பாய்ந்து பிரம்மபுரம் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி காட்பாடி ரெயில் தண்டவாள பகுதியில் கடந்த 6 மாதத்தில் பலியான 32 பேரில் 10 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 22 பேர் யார்? என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating