கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!!
கோவை இடிகரை அருகே உள்ளது மணியகாரன் பாளையம். இங்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்கள். இங்கு சிம்மசலம் என்பவர் மனைவி சுசீலா. மகள் திவ்யாஸ்ரீ (3) ஆகியோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சிம்மசலம் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
அதிகாலை எழுந்தபோது வீட்டில் இருந்த சிறுமி திவ்யாஸ்ரீயை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிம்மசலம், அவரது மனைவி சுசீலா ஆகியோர் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடினர். மேலும் அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனாலும் குழந்தை கிடைக்கவில்லை. மேலும் குழந்தையை சுற்றி போடப்பட்டு இருந்த கொசுவலையும் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த ரூ. 4 ஆயிரம் பணமும் திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி திவ்யாஸ்ரீயின் காதில் ¼ பவுன் தங்க கம்மல் அணிந்து இருந்ததும், வீட்டில் இருந்த ரூ. 4 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கொசு வலை அறுக்கப்பட்டு இருந்ததால் குழந்தையை ¼ பவுன் தங்க கம்மலுக்கு ஆசைப்பட்டு யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடிவருகிறார்கள். ¼ பவுன் தங்க நகைக்காக சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating