கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் காட்டுத்தீயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாநிலத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இங்கு தீயினால் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களை புஷ் விமானத்திலிருந்தவாறு பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியா ஆளுநர் ஆர்னோல்ட் ஸ்குவார்ஷெனக்கருடன் இணைந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கான விஜயத்தை முடித்த பின்னர் இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசாங்கம் வழங்குமென புஷ் தெரிவித்துள்ளார். இத்தீயினால் உயிரிழந்தவர்களின் தொகை 14 ஆக அதிகரித்துள்ளதுடன் இதனால், ஏற்பட்ட சேதங்கள் 1 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய புஷ் நாங்கள் உங்களை மறக்கப் போவதில்லை எனத் தெரிவித்ததுடன் உங்களின் வாழ்க்கை இருண்டது போல் தோன்றலாம் . ஆனால், உங்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையப் போகிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நிச்சயம் மேற்கொள்ளுமென ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பரவ ஆரம்பித்த காட்டுத்தீயினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் இரு வருடங்களுக்கு முன்னர் கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வையடுத்து அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வு இது எனக் கருதப்படுகிறது.
இதேவேளை இத்தீ பரவுவதற்குக் காரணமானவர் எனக் கருதப்படும் நபர் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 70, 000 டொலர்கள் சன்மானம் வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.