சூரியன் எவ்.எம். உட்பட 5 வானொலி நிலையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்
ஆசிய ஒலிபரப்பு நிலையத்தின் 5 வானொலி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது. சூரியன் எவ்.எம்.உள்ளிட்ட ஆசிய ஒலிபரப்பு நிறுவனத்தின் 5 வானொலி நிலையங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசாங்க தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்ஷன சேனநாயக்க கூறுகையில்; கடந்த புதன்கிழமை இரவு மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் தவறான செய்தியை ஒலிபரப்பியமையாலே அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டது. திஸ்ஸமகாராம கிராமமொன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் சகிதம் உட்புகுந்ததாக இவ்வானொலி நிலையங்களில் செய்தி ஒலிபரப்பாகியது. எனினும் பின்னர் இச்செய்தி பிழையானதென ஊர்ஜிதமாகியது. இச்செய்தி மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியது. ஊடகங்கள் உண்மையான செய்திகளையே ஆதாரங்களுடன் ஒலிபரப்புவது பிரதானமானது. தவறான செய்திகள் சமூகங்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
இவற்றை கவனத்திற்கொண்டே ஆசிய ஒலிபரப்பு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 5 வானொலி நிலையங்களினதும் அனுமதிப் பத்திரங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்தது என்றார். கண்டனம்
இதேவேளை, அரசாங்கத்தின் இத்தீர்மானத்தை சுயாதீன ஊடக அமைப்புகள் கடுமையாக கண்டனம் செய்துள்ளன.
சுனந்த
சுதந்திர ஊடக அமைப்பின் பிரதான ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய இதுபற்றி கூறுகையில்;
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை ஒடுக்க மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே நாம் இதனை கருதுகிறோம். ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொள்ளாமலே அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதை நடுநிலையானதென நாம் கருதவில்லை.
தவறான செய்திகளை ஒலிபரப்பியது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம், அரசாங்க ஊடகங்கள் மீதும் சுமத்தி அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்ய முன்வருமா?
சுதந்திரமாக செயற்படும் ஊடகங்கள் மீது அரசியல் சாயம் பூசுவதை நாம் கைவிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், அரசாங்கத்தையும் கோருகிறோம்.
சூரியன் எவ்.எம். தமிழ் மக்களுக்கு நிறைவான செய்திகளை வழங்கியது. 2 தனியார் இலத்திரனியல் ஒலிபரப்பு ஊடகங்களே தமிழ் மக்களுக்கான செய்திகளை ஒலிபரப்புகின்றன. அவற்றிலும் தடைகளை ஏற்படுத்துவது அமக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை மறுப்பதாகும் என்றார்.