திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுப்குமார் திவேதி. போலீஸ்காரரான இவர் அம்மாநில சுகாதாரதுறை மந்திரியின் பாதுகாவலராக உள்ளார்.
இவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். ஏழுமலையானை வழிபட்ட பின்னர் கீழ் திருப்பதி வர பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்தது. உட்கார இடம் பிடிப்பதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் அனுப்குமார் திவேதி பிடித்த இடத்தில் இன்னொரு பக்தர் உட்கார்ந்து விட்டார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஆவேசம் அடைந்த அனுப்குமார் திவேதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பக்தரை மிரட்டினார். பக்தரின் முகத்துக்கு நேராக துப்பாக்கியை பிடித்து சுட்டு விடுவதாக கூறினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அனுப்குமார் திவேதியை கைது செய்தனர். அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பதியில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் கண்காணிப்பையும் மீறி அனுப்குமார் திவேதி துப்பாக்கி கொண்டு வந்தது எப்படி? என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முடி காணிக்கை செய்த இடத்தில் துப்பாக்கியை வைத்து விட்டு சாமி தரிசனம் செய்ததாக போலீஸ்காரர் அனுப்குமார் திவேதி கூறினார்.
இதுகுறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating