ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு!!
ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு கொடூரனால் வீசப்படும் ஆசிட் என்பது, அந்த பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீர் குலைத்துவிடுகிறது. இது போன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் வேலை தர முன் வராத நிலையில், வேலையின்றி வாடும் அவர்களுக்கு வேலை தந்து உதவ டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லியின் ஒவ்வொரு நகரத்திலும் 35-க்கும் அதிகமான ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள், சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக அரசுத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள தகவலின்படி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு நிவாரண நடவடிக்கையாக, அவர்களின் தகுதிக்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர அரசுப்பணிகளை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சேவைத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் சேவைத்துறையிடம் அம்மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.
Average Rating