பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவின் ஆயுள் தண்டனை ரத்து: அதிபர் குளோரியா மன்னிப்பு வழங்கினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவுக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு அதிபர் குளோரியா அரோயோ மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்தார்.70 வயதான எஸ்ட்ராடா சினிமா நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இவர் 1998-ம் ஆண்டு முதல் 2001 வரை அதிபராக இருந்தார். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் 344 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட 6 வாரங்களுக்கு பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிபர் குளோரியா ரத்து செய்தார். 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் அனைவருக்கும் விடுதலை அளிப்பது என்ற நிர்வாகத்தின் கொள்கையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்து உள்ளது. 70 வயது அடிப்படையில் விடுதலை அளிக்கவேண்டும் என்று எஸ்ட்ராடா கடந்த திங்கட்கிழமை அரசுக்கு மனு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். எஸ்ட்ராடாவுக்கு குளோரியா மன்னிப்பு அளித்து இருப்பது அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. எஸ்ட்ராடா அதிபராக இருந்தபோது குளோரியா துணை அதிபராக இருந்தார். 2001-ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சிக்கு இவர் ஆட்சியை கைப்பற்றினார்.
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன் என்று எஸ்ட்ராடா சபதம் செய்து உள்ளபோதிலும் ஏழை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிக அளவில் உள்ளது. குளோரியாவுக்கு எதிராக இருப்பவர்கள் மத்தியில் எஸ்ட்ராடா ஒரு ஹீரோவாக இருக்கிறார். இதனால் குளோரியாவின் எதிர்கால அரசியலுக்கு அவர் மிகப்பெரிய அபாயமாக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.