அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுரை வீரன், மதுரை மீனாட்சி, காளி, முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழாவின்போதும் இவர்கள் மூக்குடியில் உள்ள ஒரு இடத்தில் எருமை, வெள்ளாட்டு கிடா, கோழிகளை பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டும் திருவிழா பெருமாள் வழிபாட்டுடன் தொடங்கியது.
நேற்று காலை நரிக்குறவர்கள் ஆங்காங்கே தாங்கள் அமைத்திருந்த குடிலின் உள்ளே மதுரை வீரன், காளி, மதுரை மீனாட்சி, முத்துமாரியம்மன் போன்ற தெய்வங்களின் உருவங்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகள் நரிக்குறவர்கள் தங்கள் குல வழக்கப்படி நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக எருமை, வெள்ளாட்டு கிடா, கோழி போன்றவற்றை வீட்டிற்கு வாங்கி வந்து முறையாக பராமரித்து வந்தனர்.
கடுமையான விரதம் இருந்த அவர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக எருமை மாடு, வெள்ளாட்டு கிடா போன்றவற்றை வெட்டும் முன்பு அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்து, குடிலின் முன்பு அமைத்திருந்த தீக்குண்டத்தில் இறங்கினர். பின்னர் நேர்த்திக்கடனுக்காக வாங்கி வந்திருந்த எருமை மாடு, வெள்ளாட்டு கிடா, கோழி போன்றவற்றில், காளிக்கு எருமை மாட்டையும், மதுரை வீரனுக்கு வெள்ளாட்டு கிடாவையும், முத்துமாரியம்மனுக்கு கோழிகளையும் பலியிட்டனர்.
பின்னர் அவற்றில் இருந்து பீய்ச்சிக் கொண்டு வந்த ரத்தத்தை எந்த கடவுளுக்கு பலி கொடுத்தனரோ அந்த கடவுளின் உருவத்திற்கு பூசினர். தொடர்ந்து எருமை மாடு, வெள்ளாட்டு கிடா, கோழிகளின் ரத்தத்தை நேர்த்திக் கடனாக நரிக்குறவர்கள் குடித்தபோது, அப்பகுதியில் இருந்தவர்கள் பரவசத்திற்கு உள்ளானார்கள்.
கூத்தாடிவயலில் நரிக்குறவர்கள் சமூகத்தினர் நடத்திய திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நரிக்குறவர்கள் கலந்து கொண்டனர்.
Average Rating