திருமங்கலம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார்: மாணவ–மாணவிகளுடன் பெற்றோர் போராட்டம்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 38 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்த லதாதேவி என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார். இங்கு 3 ஆசிரியைகளும், ஒரு ஆசிரியரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவ –மாணவிகளை தலைமை ஆசிரியை லதாதேவி தரக் குறைவாக பேசுவதாகவும், படிக்கவிடாமல் வேலை வாங்குவதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாணவ–மாணவிகளின் பெற்றோர் பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தலைமை ஆசிரியை லதாதேவியை இடமாற்றம் செய்யக்கோரி இன்று பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ–மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:–
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வந்தனர். தற்போது 38 மாணவ–மாணவிகளே படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் படிக்க விடாமல் மாணவ–மாணவிகளை வேலைவாங்கி வருகின்றனர். பள்ளியை சுத்தம் செய்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், தண்ணீர் பிடித்தல், கடைக்கு அனுப்புதல் போன்ற பணிகளை செய்ய விடுகின்றனர். மேலும் இந்த பள்ளியில் வேலை பார்க்கும் தலைமை ஆசிரியைக்கும், மற்ற ஆசிரியைகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையில் மாணவ–மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியை லதாதேவியை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் கணேசன், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினையால் அரசு நடுநிலைப்பள்ளி திறக்கப்படவில்லை.
Average Rating