தென் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தனுஷ்-வடிவேல்-திரிஷா படப்பிடிப்புகள் பாதிப்பு
தென் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தனுஷ், வடிவேல், திரிஷா நடிக்கும் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனுஷ் படம்தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் `யாரடி நீ மோகினி’ படப்பிடிப்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த `யாரடி நீ மோகினி’ குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வருவதால், `யாரடி நீ மோகினி’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.தினமும் சில மணி நேரங்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழை எப்போது விடும், படப்பிடிப்பை எப்போது நடத்தலாம்? என்று படப்பிடிப்பு குழுவினர் ஓட்டல்களிலேயே காத்திருக்கிறார்கள்.
வடிவேல் படம்
வடிவேல் கதாநாயகனாக நடிக்க, செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து வரும் `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெறுகிறது. அங்கும் பலத்த மழை பெய்வதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விடாமல் அடைமழை பெய்ததால், 2 நாட்கள் படப்பிடிப்பை ரத்து செய்தார்கள்.
அதன்பிறகு தினமும் வெயில் அடிக்கும்போது படப்பிடிப்பை நடத்துவதும், மேகமூட்டம் வந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்வதுமாக `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படம் குற்றாலத்தில் வளர்ந்து வருகிறது.
திரிஷா
திரிஷா வித்தியாசமான வேடம் ஏற்று நடிக்கும் `அபியும் நானும்’ என்ற பட குழுவினர் மூணாறில் முகாமிட்டு இருக்கிறார்கள். இது, நடிகர் பிரகாஷ்ராஜின் சொந்த படம் ஆகும். அவர் தந்தையாகவும், திரிஷா மகளாகவும் நடிக்கிறார்கள்.
மூணாறில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடைமழை பெய்வதால், `அபியும் நானும்’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மழை எப்போது விடும்? என்று படப்பிடிப்பு குழுவினர் ஓட்டலில் காத்திருக்கிறார்கள்.