மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது!!
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்கா சப்-டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலக பங்களாவில் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தங்கியிருப்பது பாட்னாவில் புதிதாக பொறுப்பேற்ற உயர் போலீஸ் அதிகாரி விகாஷ் வைபாவுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று அதிரடியாக நூற்றுக்கணக்கான போலீசார் உதவியுடன் அரசு பங்களாவை முற்றுகையிட்டார். அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கிடம் விசாரணை நடத்த முயன்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவர்களை தடுத்தனர். அவர்களை சமாளித்து போலீசார் நேற்று மாலை 3 மணி அளவில் எம்.எல்.ஏ.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஆனந்த் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான லட்மா கிராமத்தில் அவரது வீட்டிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
Average Rating