இரட்டை குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் மறுப்பு
தலை ஒட்டி பிறந்த குழந்தைகளான வாணி, வீணாவை தனித்தனியாக பிரிக்க முடியாது என்று டாக்டர்கள் அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளை வளர்க்க தங்களிடம் பணம் இல்லை என்பதால் அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாது என்று அவர்களின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2003ல் தலை மட்டும் ஒட்டிய நிலையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதை பார்த்த அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணும், அவரது கணவரும் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். இதனால் இக்குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று கருதி, குண்டூர் மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். அதன்பின் போலீசார் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். இக்குழந்தைகளுக்கு வாணி, வீணா என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நீலோபர் மருத்துவமனையில், அக்குழந்தைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சேர்த்தனர். ஒரு ஆண்டாக இக்குழந்தைகள் நீலோபர் மருத்துவமனையில்தான் உள்ளன. அவர்களின் தலையை பிரிப்பது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையின் மேலாளர் டாக்டர் நரசிங் ராவ், குழந்தைகளின் பெற்றோரை நேற்று முன்தினம் வரவழைத்து, வாணி, வீணாவை தனித்தனியாக பிரிக்க முடியாது என்றும், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரிவித்து அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று விடுமாறும் கூறினார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இக்குழந்தைகள் வளர்வது சரியல்ல என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை வளர்க்க தங்களிடம் போதுமான வசதி இல்லை என்றும், அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாது என்று மறுத்துவிட்டு அவர்களின் பெற்றோர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.