குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிங்கவால் குரங்குகள்!!
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். இந்த சீசன் தொடர்ந்து ஜுலை, ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் தொடங்கிய பின்னரும் சீசன் நன்றாகவே இருந்தது.
அதே போல் இந்தாண்டும் சீசன் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தாமதமாவே கடந்த 18–ந்தேதி சீசன் தொடங்கியது. இதையடுத்து குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுக்க தொடங்கினர். கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வரிசையில் நின்று குளிக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது.
கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறையவில்லை. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக குற்றாலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் குற்றாலத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்வது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு பூங்காவில் இருந்து உணவுகளை சாப்பிடுவது வழக்கம். அப்போது அங்கு படையெடுத்து வரும் குரங்குகள் உணவுகளை பிடுங்கி சென்றுவிடுகிறது. மேலும் குளிக்க செல்லும் போது வைத்துவிட்டு சென்ற துணிகளையும் எடுத்து சென்று விடுகிறது. குழந்தைகள் கையில் வைத்துள்ள திண்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்போன் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக சிங்கவால் குரங்குகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி பயமுறுத்தி வருகின்றன. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் குரங்குகளின் அட்டகாசத்தால் சுற்றுலா பயணிகள் ஒருவித அச்சத்தோடே செல்கின்றனர்.
இதுபற்றி சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது:– ‘குரங்குகள் சிறுவர்கள் வைத்துள்ள திண்பண்டங்களை பிடுங்க பாய்கிறது. இதில் சில நேரங்களில் குழந்தைகளின் மீது குரங்குகளின் நகங்கள் பட்டு கீறல்கள் விழுகின்றன. எனவே அட்டகாசம் செய்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை விரட்ட வனத்துறையினர் எடுக்க வேண்டும்’ என்றார்.
Average Rating