மும்பையில் கார் மோதி 2 பேர் பலியான வழக்கு: மதுபோதையில் வாகனம் ஓட்டிய பெண் வக்கீலுக்கு ஜாமின் மறுப்பு!!
மும்பையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி 2 பேரை கொன்ற வழக்கில் கைதான பெண் வக்கீலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த பெண் வக்கீல் ஜானவி கட்கர்(வயது33) மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வருகிறார். மேலும் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். கடந்த 8-ந்தேதி இரவு ஜானவி தனது சொகுசு காரில் மும்பையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவரது கார் மும்பை தனிவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஜானவி தனது காரை தவறான பாதையில் வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது, எதிரே வந்த வந்த டாக்சி மீது ஜானவியின் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டாக்சியின் முன்பகுதி சிதைந்து போனது. ஜானவியின் காரும் பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் டாக்சி டிரைவர் முகமது சையது ஹூசைன் மற்றும் டாக்சியில் பயணம் செய்த ஹாஜி சதீம் சகாரியா(57) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஹாஜி சதீம் சகாரியாவின் மனைவி ஹபீசா(40), மகள் சாடியா(25), மகன்கள் அகமது(20), நூமான்(18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் வக்கீல் ஜானவி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த ஜானவியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ஜானவியை குர்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமின் கோரி குர்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜானவி மனு தாக்கல் செய்தார். அவரது சார்பாக பிரபல வக்கீல் அமித் தேசாய் வாதாடினார். இது போன்ற வழக்குகளில் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை முன்னுதாரணமாக வைத்து அவர் வாதாடினார். எவ்விதத்திலும் தனது கட்சிக்காரர் தடயங்களையோ, சாட்சியங்களையோ அழிக்க முயலமாட்டார் என்றும் தேசாய் உத்தரவாதம் அளித்தார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் பிரகலாத் மகாஜனோ, வழக்கின் போலீஸ் விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து இன்று ஜானவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து குர்லா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஜானவியின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
Average Rating