தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை – பணம் கொள்ளை!!
சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த மம்பேடு சகுந்தலா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் திருப்பதியில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் மனைவி மாலினி, மகள் பிரபா, மருமகன் பீட்டர், பேத்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் பேத்திக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவளை பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனால் குடும்பத்தினர் அனைவருமே ஆஸ்பத்திரிக்கு சென்று தங்கியிருந்தனர்.
இன்று காலையில் அவர்களின் உறவினர் ஒருவர் துணிமணிகளை எடுத்து வருவதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும்.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.
சூளை நைனியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயவேல். ஆட்டோ நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இரவு யாரோ வீட்டின் பூட்டை உடைத்து 1 பவுன் நகை, ரூ 25 அயிரம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டு உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண நிகழ்ச்சிக்காக ஜெயவேல் மனைவி வீட்டில் இருந்த நகையை அணிந்து சென்றதால் பல பவுன் நகை தப்பியது.
Average Rating