இறந்து கிடப்பதாக வந்த தகவலை கேட்டு போலீசார் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்!!
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி அருகே திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக வையம்பட்டி போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வையம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசாரும் ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. ஆனால் யாரும் விபத்தில் இறந்ததற்கான எவ்வித தகவலும் இல்லை. சுமார் 30 நிமிடம் அந்த பகுதியில் அலைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் ஒரு இடத்தில் சாலையின் குறுக்கே ஒரு வேஷ்டி இருப்பதை பார்த்தனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போது அதில்தான் ஒருவரை வேஷ்டியால் போர்த்தி வைக்கப்பட்டது போல் இருந்தது. இதனையடுத்து மீட்புக் குழுவினர் அந்த வேஷ்டியை திறந்து பார்த்த போது முதியவர் திடீரென எழுந்து அமர்ந்தார். இரண்டு கரங்களையும் கூப்பி போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனால் மீட்புக்குழுவினரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தொடர்ந்து செல்லுகின்ற நிலையில் சாலையின் குறுக்கே ஒருவர் இப்படி கிடந்தும் கூட அந்த வழியாக வந்த வாகனங்கள் அவர் மீது ஏற்றாமல் தள்ளி சென்றுள்ளனர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மணப்பாறை சேதுரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது(70) என்பது தெரியவந்தது. சங்கரை அவரது மகன் நேற்று அடித்ததால் மனமுடைந்த அவர் ரெயிலில் திண்டுக்கல் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பேருந்தில் மணப்பாறை நோக்கி சென்றபோது வையம்பட்டி என்ற இடத்தில் சங்கரிடம் நடத்துனர் டிக்கேட் கேட்ட போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் வையம்பட்டியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தே சென்றுள்ளார். சுமார் 10.30 மணியளவில் நடுப்பட்டி அருகே சென்ற போது பசியால் சாலையின் நடுவே நடக்க முடியாமல் படுத்துக்கொண்டது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து அவரை ஜி.என்.ஆர். மீட்புக்குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் மீட்டுகொண்டு சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து சாப்பிட விட்டு பின்னர் அவரது வீட்டில் விட்டார். இந்த சம்பவத்தால் வையம்பட்டியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating