வெறும் கையால் தேங்காய் உடைத்து சாதனை
ஒரிசாவைச் சேர்ந்த அப்பள வியாபாரி, தேங்காய்களை முழங்கை மற்றும் தலையால் உடைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஒரிசா கன்சாம் மாவட்டத்தில் உள்ள பாகர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசப் ஸ்வெய்ன். அப்பள வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் செய்தது போக மீதமுள்ள நேரங்களில் தற்காப்பு கலைகளைச் செய்வதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். பல இளைஞர்களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றும் தருகிறார். பல சாகச செயல்களை செய்து புகழ் பெற்ற நபராக விளங்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக, மட்டை தேங்காயை (நார் உறிக்கப்படாத முழு தேங்காய்) வெறும் கையால் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் ஓரளவு வெற்றி கிடைத்தது. இதையடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் மட்டை தேங்காய்களை உடைத்தார். ஏழு நிமிடம் 26 நொடிகளில் 135 மட்டை தேங்காய்களை, தனது முழங்கை, முட்டி, தலை மற்றும் உள்ளங்கையால் உடைத்து சாதனை படைத்தார். இதையடுத்து, இவரது பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது. இதுபற்றி கேசப் ஸ்வெய்ன் கூறுகையில், “”ஏதாவது வித்தியாசமாக செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தேங்காயை உடைப்பதற்கு மக்கள் சில கருவிகளை பயன்படுத்துவதை பார்த்தபோது, எனக்குள் பொறி தட்டியது. மட்டை தேங்காய்களை வெறும் கையால் உடைத்து சாதனை படைப்பது என முடிவு செய்தேன். கடுமையாக பயிற்சி பெற்று, தற்போது எனது ஆசையை நிறைவேற்றியுள்ளேன். நான் பல சாகசங்களை நிகழ்த்தியும் மாநில அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. மாநில அரசிடம் பலமுறை தொடர்பு கொண்டும், இதுவரை எந்த பதிலும் இல்லை. பொதுமக்களிடம் இருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன்,” என்றார்.