பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!!
ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தனியார் தொலைகாட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தா சாமியார் மீது, அவருடைய ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்திராவ் என்பவர் பிடதி போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 2-ந் தேதி ராமநகர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில் ராமநகர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நித்யானந்தா ஆஜரானார்.
மேலும் நித்யானந்தாவின் சீடர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நித்யானந்தா சார்பில் வக்கீல் முத்துமல்லையா ஆஜராகி வாதாடும்போது, ‘இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஐகோர்ட்டில் இருப்பதால், அந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை அறிக்கை வரும் வரையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து நித்யானந்தாவும், அவரது சீடர்களும் புறப்பட்டு சென்றனர்.
Average Rating