வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மூவருக்கு ஓராண்டு தண்டனை ஒரு நாளானது
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ஒரு நாளாக சென்னை செஷன்ஸ் கோர்ட் குறைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கும் கயல்விழி என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆறரை சவரன் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் திருமணத்திற்காகும் செலவை ஏற்றுக் கொள்வதாக கயல்விழியின் தந்தை கூறினார். திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு திருவேற்காடு கோயிலில் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.இந்நிலையில் சகோதரியின் திருமணம் முடிந்த பின்னரே எத்திராஜ் திருமணம் நடைபெறும், கூடுதலாக ரூ.20 ஆயிரம் மற்றும் மோதிரம் போட வேண்டும் என எத்திராஜ் குடும்பத்தினர் வற்புறுத்தினர். இதையடுத்து அண்ணாநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் கயல்விழி புகார் கொடுத்தார். இந்திய தண்டனைச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் எத்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் சக்கரவர்த்தி, மல்லிகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.வழக்கை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரித்து, மூன்று பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், இரண்டாயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மூவரும் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி முருகன் விசாரித்தார். தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வயது கருதியும், கயல்விழிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்டதாலும் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டது. கோர்ட் பணிகள் முடியும் வரை ஒரு நாள் மட்டும் இருக்க வேண்டும் என்றும் தலா ரூ.நான்கு ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.