நெல்லையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வாலிபர் கைது!!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் அந்த நிறுவனத்தில் கேசியராக பணியாற்றும் அண்ணாதுரை என்பவர், வசூலான ரொக்கப்பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினார்.
அப்போது பெட்ரோல் பங்க்கிற்கு ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார். திடீரென அவர் அண்ணாதுரையை வழிமறித்து, மோட்டார் சைக்கிளின் ஹேண்டில்பார் மீது அரிவாளால் ஓங்கி வெட்டினார். இதில் அண்ணாதுரை நிலை குலைந்து கீழே விழுந்ததும் அந்த நபர் பணப்பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
அண்ணாதுரை வங்கிக்கு பணம் எடுத்துச்செல்வதை ஏற்கனவே தெரிந்திருந்த நபர்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பணத்தை பறிகொடுத்த அண்ணாதுரை ஏற்பாட்டிலேயே இந்த கொள்ளை நடந்தது தெரியவந்தது. அண்ணாதுரை டவுண் திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார். அவரது நண்பர் வெள்ளாளன் குளத்தை சேர்ந்த முருகன்(38). அண்ணாதுரை பலரிடம் கடன் வாங்கியிருந்தார். பணம் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கி வந்தனர்.
இதுபற்றி அண்ணாதுரை நண்பர் முருகனிடம் கூறினார். உடனே முருகன் நூதன ஐடியா கொடுத்தார். அதன்படி பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும்போது நான் பைக்கில் வந்து பறித்து செல்வதாகவும், அதில் கிடைக்கும் பணத்தை ஆளுக்கு பாதி பங்குபோட்டுக் கொள்ளவேண்டும் என்றும் திட்டம் தீட்டினர்.
அதன்படி மதியம் வங்கியில் பணம் செலுத்த அண்ணாதுரை தயாராகி சென்றபோது பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த முருகன் அண்ணாதுரையை அரிவாளால் வெட்ட முயல்வதுப்போல பாசங்கு செய்து பணத்தை பறித்தார்.
அண்ணாதுரை வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து திருடன் திருடன் என கத்தியபடி நாடக மாடினார். இதை நம்பிய அக்கம்பக்கத்தினர் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அண்ணாதுரையையும், முருகனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating