துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கு: 7 பேர் கைது!!
காஞ்சிபுரத்தில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்ன காஞ்சிபுரம் வெங்கடேசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 51). இவர் காஞ்சிபுரம் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் மேற்பார்வையில் பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், கண்ணன், சந்திரசேகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், காஞ்சிபுரம் ரெயில்வே ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார் மின்னல் வேகத்தில் அந்தந்த இடங்களுக்கு சென்று மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் துப்புரவு மேற்பார்வையாளர் மோகனிடம் வேலை செய்யும் நகராட்சி துப்புரவு பணியாளர் கோவிந்தராஜ், பணியை சரிவர செய்யாததால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி நகராட்சி துப்புரவு ஊழியர் கோவிந்தராஜ், மோகனை கொலை செய்ய திட்டமிட்டார். அதையொட்டி மர்ம கும்பல், காஞ்சிபுரம் காவாங்கரை தெரு வழியாக வந்த நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகனை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையொட்டி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் பெரிய காஞ்சிபுரம் முனிசிபல் லைன் பகுதியை சேர்ந்த காஞ்சிபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர் கோவிந்தராஜ் (30), அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் (22), குரு (20), உமேஷ் (23), முருகன் (25), அமுல்ராஜ் (28), காஞ்சிபுரம் ரெயில்வே ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த நகராட்சி துப்புரவு பணியாளர் சங்கீத்குமார் (26) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் அமுல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவர்களிடமிருந்து வீச்சரிவாள் கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் காஞ்சிபுரம் குற்றவியல் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating