பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் எறையூர், பெருமத்தூர், கிளியூர், திட்டக்குடி பார்டர், புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் 52 மாணவர்களும், 50 மாணவிகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த 1998–ம் ஆண்டு முதல் சமூக அறிவியல் ஆசிரியராக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினன்குடி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சமீப காலமாக பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 30–க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதுடன் உடலில் பல்வேறு இடங்களில் கை வைத்து சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் கழிவறை செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று அவரது செல்போனில் அரை குறை ஆடையுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
வாரவிடுமுறைகளில் வீடுகளுக்கு சென்ற மாணவிகளில் சிலர் பள்ளியில் தங்களுக்கு ஆசிரியர் கொளஞ்சிநாதனால் ஏற்படும் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த பெற்றோர் கடந்த 15–ந்தேதி பள்ளியில் நடந்த பெற்றோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 28–ந்தேதி 8–ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசிரியர் கொளஞ்சிநாதன் சில்மிஷத்தில் ஈடுபட்டது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 16 மாணவிகளின் பெற்றோர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கோவிந்தராஜூ மற்றும் மங்களமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆசிரியர் கொளஞ்சிநாதன், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததால் ஆசிரியர் கொளஞ்சி நாதனை கைது செய்தனர்.
பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Average Rating