வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
அரக்கோணம் அடுத்த சூளை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன. 17 வயது நிரம்பிய ராணி 9ம் வகுப்பு வரை படித்தவர். தொடர்ந்து படிக்காமல் வீட்டில் இருந்தார்.
ராமனுக்கும் அதே பகுதியை சேர்ந்த படவேட்டம்மன் மகன் பாஸ்கரனுக்கும் (22) நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. அதனால் ராமனின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தார்.
கடந்த 9–8–2011 அன்று ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ராணியை வலுக்கட்டாயமாக பாஸ்கரன் கற்பழித்தார். பின்னர் ராணியின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
உடலில் தீ காயங்களுடன் ராணி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். பாஸ்கரன் தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ராணியை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர். இது தொடர்பாக வேலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசு சார்பில் வக்கீல் சிவஜோதி வாதாடினார்.
இந்த வழக்கில் நீதிபதி மதுசூதனன் இன்று தீர்ப்பு கூறுவதாக அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பாஸ்கரன் குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரத்தையும் நீதிபதி கூறினார்.
ராணியை கொன்ற வழக்கில் பாஸ்கரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் 2 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ராணியை கற்பழித்த குற்றத்துக்காக பாஸ்கரனுக்கு 7 ஆண்டு தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் 2 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி மதுசூதனன் கூறி இருந்தார்.
Average Rating