ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்!!
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, 7 வயது மகளும் தாயும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்று முன்தினம் வந்த நபர் ஒருவர், தான் பீகாரிலிருந்து வருவதாகக் கூறி, தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தங்குவதற்காக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். ஹோட்டல் மேலாளர் அவரது அடையாள அட்டை மற்றும் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அறையின் சாவியை அவரது கையில் கொடுத்தார்.
இந்நிலையில், நேற்று ஹோட்டலில் அந்த குறிப்பிட்ட அறையில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக ஊழியர் ஒருவர் போலீசில் தகவல் சொல்ல, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அறையில் தூக்க மாத்திரைகள் அங்கங்கே சிதறிக் கிடந்தது. போலீசார் அறையை முழுமையாக சோதனை செய்யும் போது, அலமாரி ஒன்றிற்குள் தாயும் மகளும் பிணமாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, ஆழ்ந்த தூக்கத்தில் அவர்கள் இருக்கும் போது உயரழுத்த மின்சாரத்தை அவர்களின் உடலில் செலுத்தி, இறந்து போன, பிஞ்சுக் குழந்தையையும் அதன் தாயையும் கயிற்றால் கட்டி அலமாரிக்குள் அடைத்து விட்டு, அவர்களுடன் வந்த நபர் தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹோட்டலில் சம்புநாத் குப்தா என்று பெயர் கொடுத்துள்ள அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating