பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார மந்திரியாக உள்ள சவுதரிலால் சிங், பெண் மருத்துவர் ஒருவரின் கோட் காலரில் கை வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது.
லக்கான்பூர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின் காலரை உள்நோக்கத்துடன் கைவைத்தது போல் அப்புகைப்படம் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை துவங்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதா என ஆய்வு செய்ய வந்த மந்திரி சவுதரிலால், அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவரின் கோட் காலர் சரியாக இல்லாததை கண்டார்.
உடனடியாக அப்பெண் மருத்துவரின் கோட் காலரில் கைவத்த மந்திரி, காலரை சரியாக்கிவிட்டார். அப்போது அப்பெண் மருத்துவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக நின்றிருந்தார். அவருக்கு அருகிலிருந்த மற்றொரு பெண் மருத்துவர் தனது கோட்டும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொண்டார். நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்த நேரத்தில் தான் மந்திரி இப்படி நடந்துகொண்டார். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று மந்திரி தரப்பு சொல்கிறது.
இந்த மந்திரி மீதுதான், கடந்த பிப்ரவரி மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மன ரீதியாக துன்புறுத்துவதாக புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
Average Rating