பாஸ்போர்ட் மோசடி-டிராவல்ஸ் ஏஜெனட், புரோக்கர் உள்பட மூவர் கைது
நண்பனின் ரேசன் கார்டை பயன்படுத்தி, புகைப்படத்தை மாற்றி மோசடி பாஸ்போர்ட் பெற முயன்றவரும் டிராவல்ஸ் ஏஜென்ட்டும் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜன். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் செளதிக்கு வேலைக்கு சென்றா. ஆனால் அவர் சுற்றுலா விசாவில் சென்றதால் குறிப்பிட்ட விசா காலாவதியானவுடன் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஊரில் சில காலம் பெயிண்டிங் தொழில் செய்து வந்த ஜெயராஜின் பாஸ்போர்ட் காணாமல் போனது. மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பிய ஜெயராஜன், தனது பாஸ்போர்ட் காணாமல் போனதை மறைத்துவிட்டு, போலி பாஸ்போர்ட் தயாரிக்க திட்டமிட்டார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பன் சுரேஷிடம் தனக்கு வங்கி கணக்கு தொடங்க ஜாமீன் தேவைப்படுவதாக கூறி அவரது ரேஷன் கார்டை பெற்று சென்றுள்ளார்.
பின்னர் வடசேரி புதுக்குடியிருப்பை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிண்டோவி மற்றும் திருச்சி வரகநேரியை சேர்ந்த புரோக்கர் முருகதாஸ் ஆகியோர் உதவியுடன் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் போட்டோவை மாற்றி தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.
பாஸ்போர்ட் விசாரணைக்காக கோட்டார் காவல் நிலையத்தில் இருந்து சுரேஷ் வீட்டிற்கு போலீசார் சென்றபோது மோசடி அம்பலமானது. இதனையடுத்து கோட்டார் போலீசார் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்ட ஜெயராஜன், டிராவல்ஸ் ஏஜென்ட் பிண்டோவி, திருச்சி புரோக்கர் முருகதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.