சித்தூர் வனப்பகுதியில் செம்மர கடத்தல்: வேலூர் வாலிபர் கைது!!
சித்தூர் பாக்ராபேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாக்ராபேட்டை வனப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 கார்கள் அந்த வழியாக வந்தன. அதனை போலீசார் வழிமறித்தனர். ஆனால் 2 கார்களும் நிற்காமல் சென்றன. எனவே அந்த கார்களை போலீசார் துரத்தி சென்றனர்.
அந்த கார்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வழிகாட்டியபடி சென்றது தெரியவந்தது. எனவே அந்த மோட்டார் சைக்கிளையும் கார்களையும் விடாமல் துரத்தி சென்றனர். தலகோனா என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளையும் காரையும் மறித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேபோல ஒரு காரில் வந்தவரும் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மற்றொரு காரில் வந்த வாலிபரும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
போலீசாரும் அவரை விடாமல் துரத்தி சென்றனர். திடீரென அந்த வாலிபர் அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். இதனால் அவரால் தொடர்ந்து ஓட முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 25) என்பது தெரியவந்தது. 2 காரிலும் இருந்த 500 கிலோ எடையுள்ள செம்மர கட்டைகளை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இந்த செம்மர கட்டைகள் எங்கு கடத்தப்பட்டது? கடத்தலின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தொடர்பாக கைதான விஜயகுமாரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த செம்மர கட்டை கடத்தல் பின்னணியில் தொழில் அதிபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார், யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating