தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த பெண்: போலீசார் விசாரணை!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசடி காட்டுப்பகுதியில் இன்று காலை பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதூர்பாண்டியா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார், அவரது உடல் அழுகியிருந்தது. இதனால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மர்மநபர்கள் யாராவது அவரை இங்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பகுதியில் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மேல அரசடி காட்டுப்பகுதியில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating