விமான பயணிகளை இறக்கி விட்டதற்கு மன்னிப்பு கோரிய கிரண் ரிஜிஜூ!!
தான் பயணம் செய்வதற்கு ஏதுவாக விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்டதாக சர்ச்சை எழுந்ததால், மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜூ மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு, கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் லெஹ் நகரத்தில் இருந்து விமானத்தில் டெல்லி வந்தார். அவருடன் அவரது உதவியாளர் ஒருவரும் உடன் வந்தார். அவர்கள் புறப்பட்ட விமானம் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டதாகவும், அவர்களுக்காக ஏற்கனவே விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் இறக்கி விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விமானம் தாமதமாக புறப்பட்டதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை அளிக்கும்படி விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த புகாரை மத்திய மந்திரி ரிஜிஜு மறுத்துள்ளார். இதுபற்றி அவர் டார்ஜிலிங்கில் இருந்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பதில் விளக்கம் விவரம் வருமாறு:
ஜூன் 24-ந் தேதி லெஹ் நகரத்தில் நடந்த சிந்து தரிசனம் நிகழ்ச்சியில் அந்த மாநில துணை முதல்-மந்திரி நிர்மல் சிங்குடன் கலந்து கொண்டேன். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டோம். முதலில் நாங்கள் ஹெலிகாப்டர் மூலம்தான் திரும்புவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரில் இருந்து லெஹ் நகரத்துக்கு ஹெலிகாப்டர் வரவில்லை.
இதையடுத்து துணை முதல்-மந்திரி கேட்டுக் கொண்டதன்படி அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி திரும்ப முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு துணை முதல்-மந்திரியுடன் நாங்கள் விமானத்தில் ஏறி டெல்லி திரும்பினோம். எங்களுக்காக 3 பயணிகள், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. அப்படி நடந்திருந்தால் அது தவறான நடவடிக்கை ஆகும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating