காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை
காதலன் வீட்டு முன்பு காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாழையூத்து அருகே உள்ள அலங்காரபேரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவரது மகள் மெர்சி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மெர்சி, ராஜவல்லிபுரத்தில் உள்ள தனது தாத்தா வள்ளுவன் வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது மெர்சிக்கும், தினகரன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தினகரன் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததற்கு, இரு வீட்டிலும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மெர்சி ஒரு ஆட்டோவில் தாத்தா வீட்டில் இருந்து காதலன் தினகரன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தினகரனின் பெற்றோர் இவர்களின் காதலை கண்டித்துள்ளனர். அத்துடன் படிக்கின்ற வயதில் நன்றாக படியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மெர்சிக்கும், தினகரனின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த மெர்சி அந்த இடத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை தினகரனின் தாய் ராஜம்மாள் அங்குள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மெர்சி பரிதாபமாக இறந்தார்.
காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.