கை கழுவுவதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த மத்தியப் பிரதேச மாணவர்கள்!!
சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் இருந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைகளை கழுவி, சுத்தப்படுத்திய நிகழ்ச்சி தற்போது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அர்ஜென்ட்டினா, பெரு மற்றும் மெக்சிக்கோ நாடுகளை சேர்ந்த 7 லட்சத்து 40 ஆயிரத்து 870 பேர் வெவ்வேறு நாடுகளில் இருந்தவாறு கடந்த 14-10-2011 அன்று ஒரே நேரத்தில் கை கழுவியது நேற்றுவரை உலக சாதனையாக கருதப்பட்டது.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 15-10-2014 அன்று மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 51 மாவட்டங்களை சேர்ந்த 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மாணவ-மாணவியர் 13 ஆயிரத்து 196 மையங்களில் இருந்தவாறு கைகளை கழுவும் நல்ல பழக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒரே நேரத்தில் கை கழுவினர்.
இங்குள்ள 19 ஆயிரத்து 375 பள்ளிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்களது கைபேசிகளில் பதிவு செய்து கொண்டனர்.
இந்த சாதனை முந்தைய சாதனையை முறியடித்து விட்டதாகவும், இதை அங்கீகரிக்கும் விதமாக விரைவில் சான்றிதழ் அளிக்கப்பட உள்ளதாகவும் கின்னஸ் நிறுவனத்துக்கான இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக மத்தியப் பிரதேசம் மாநில அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Average Rating