3 நெல்லைத் தமிழர்கள் நைஜீரியாவில் கடத்தல்
நைஜீரியாவில் உள்ள எண்ணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 3 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ரூ. 200 கோடி தர வேண்டும் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனராம். இதனால் 3 பேரின் குடும்பத்தினரும் பெரும் கவலையடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர்கள் ஜெயபால் அஜீத் காமராஜ், பொன்னம்பலம் வினோத், குமரேசன் மோகன்நவாஸ். இவர்கள் மூவரும் நைஜீரியாவில் உள்ள ஈஎன்ஐ குழுமத்தை சேர்ந்த எப்.பி.எஸ்.ஓ மிஸ்டராஸ் ஆயில் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். 4 வாரம் பணி, 4 வாரம் விடுப்பு என்ற முறையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். ஊருக்கு வந்திருந்த ஜெயபால், கடந்த செவ்வாய் கிழமைதான் நைஜீரியா புறப்பட்டு சென்றுள்ளார். வெள்ளிகிழமை காலை 6.30 மணிக்கு நைஜீரியா ரிவர்ஸ் ஸ்டேட் பகுதிக்கு அருகிலுள்ள போர்ட் ஹார்ட் கோர்ட்டிலிருந்து 56 கடல் மைல் தூரத்தில் கப்பலை நிறுத்தி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது 8 விரைவு படகுகளில் வந்த நைஜீரிய தீவிரவாதிகள் 40 பேர் துப்பாக்கி உட்பட பயங்கர ஆயுதங்களுடன் கப்பலுக்குள் புகுந்தனர். அப்போது அந்த கப்பலில் 67 பேர் பணியில் இருந்தனர். தீவிரவாதிகள் கப்பலுக்குள் நுழைவதை அறிந்த கப்பல் ஊழியர்கள் இன்ஜின் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டனர்.
கப்பல் கேப்டன் மற்றும் 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் மற்றொரு அறையில் ஒளிந்து கொண்டனர். இந்த அறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் 6 பேரையும் பிடித்துள்ளனர்.
இதையடுத்து கப்பல் கேப்டன் மைக்கேல் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது 50 மில்லியன் டாலர் (சுமாராக ரூ. 200 கோடி) கொடுத்தால் தான் 6 பேரையும் விடுவிப்போம் என்று கூறி கடத்தி சென்று விட்டனர்.
கடத்தி செல்லப்பட்டவர்களில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாண்டுரெங்கசாரி என்ற இந்தியரும் அடக்கம்.
நைஜீரியாவில் 3 தமிழர்கள் கடத்தச் செல்லப்பட்டுள்ளதால் அவர்களது சொந்த ஊரான வடக்கன்குளத்தில் பரபரப்பு நிலவுகிறது. மூவரின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.