முகச் சீரமைப்பு சத்திர சிகிச்சை துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்திய மருத்துவர்
இந்தியாவில் முதல்முறையாக தாடைமூட்டு அறுவைச் சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதியதோர் அணுகுமுறையை நிலைப்படுத்தியதற்காக டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பி.எச்.டி. பட்டம் வழங்கியது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான சுர்ஜித்சிங் பர்னாலா பட்டம் வழங்கினார். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குழந்தைப் பருவத்தில் விளையாடும் போது நாடிப் பகுதியில் அடிபடுவதால் தாடைமூட்டில் இரத்தக்கட்டு ஏற்பட்டு கீழ்தாடை எலும்பும் மண்டை ஓட்டு எலும்பும் சேர்ந்து விடுவதால் வாய் திறக்க முடியாது . இதற்கு வாய்ப்பூட்டு (Lock Jaw-Ankylosis) என்று பெயர். கீழ்த்தாடையில் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் முகம் கோணலாக மாறி விடுகிறது. இதை நிவர்த்தி செய்ய பல சத்திர சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும், சிறந்த பலனளிக்கப்படுவதில்லை. இவர் கண்டுபிடித்த ?Temporalis lnterposition with Medial Anchorage?? என்ற நவீன சத்திர சிகிச்சை முறை, இணைந்த தாடை மூட்டினை சீர்செய்து இயல்பாக நோயாளி வாயை திறக்க வைக்கும் முறையில் வெற்றி பெறவைத்துள்ளது. கன்னப்பொட்டு தசையை மூட்டுப்பகுதியின் இரண்டு எலும்புகளுக்கும் இடையே வைத்து கீழ்தாடையின் உட்புறமாக தைத்து தாடைமூட்டு மீண்டும் இணைந்து விடாமல் தடுக்கும் இந்த நுணுக்கத்தை சர்வதேச மருத்துவ சஞ்சிகைகள் அங்கீகரித்து பிரசுரித்துள்ளன. இம்முறையினை விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சியின் முடிவினை சமர்ப்பித்தார். இந்த மருத்துவ வெற்றியை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்து டாக்டர் பட்டம் வழங்கியது.