ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று மீண்டும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி ஊராட்சி நல்லூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் மகன் மணிகண்டன் (22) . இவர் மேட்டூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., படித்துவிட்டு தற்போது ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி தாலுக்கா டி. வீரப்பள்ளி பகுதியை சேர்ந்த பூபதியின் மகள் சந்தியா (20).
இவர் நர்சிங் படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் குடியிருக்கும் வீட்டிற்கும், சந்தியா வேலை பார்க்கும் மருத்துவமனையும் அருகருகே இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து இருவரும் கடந்த மே மாதம் 12–ந்தேதி ஓசூர் மலைக்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பெண் வீட்டாருக்கு பயந்து ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் ஓமலூர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு அந்த பதற்றம் அடங்குவதற்கு முன்பு தற்போது ஓமலூர் காவல் நிலையத்தில் மற்றொரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating