ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான இளம்பெண்ணை தேடி சென்னை விரைந்தது தனிப்படை!!
ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பெண் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
ஆம்பூரில் கடந்த 27–ந்தேதி இரவு கலவரம் வெடித்தது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கலவரம் ஆம்பூரை சேர்ந்த ஷமில்அகமது என்பவர் போலீஸ் விசாரணைக்கு சென்றபோது பலியானதால் ஏற்பட்டது.
பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா மாயமான வழக்கு தொடர்பாகவே ஷமில் அகமது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணை முடிந்து திரும்பிய அவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் கூறினர். இதனால்தான் கலவரம் மூண்டது.
இத்தனை கலவரம் நடந்த பின்னரும் பவித்ரா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் என்ன ஆனார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரை மீட்டுத்தரக்கோரி அவரது கணவர் பழனி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். எனவே பவித்ராவை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பவித்ரா ஏற்கனவே பணி புரிந்த ஆம்பூர் ஷூகம்பெனி, ஈரோட்டில் உள்ள நகைக்கடையில் விசாரணை நடத்தினார்கள். மேலும் பவித்ரா பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்றும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் ஆம்பூர், ஈரோடு, பெங்களூரில் பவித்ரா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பவித்ராவின் கணவர் பழனியை போலீசார் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அவரிடம் பவித்ரா குறித்த விசாரணை நடத்தினார்கள். மேலும் பவித்ராவின் செல்போன் எண்ணை வைத்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கினர்.
பவித்ரா சென்னை கோயம்பேட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பவித்ராவை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் 24 மணி நேரத்தில் அவரை பிடித்துவிடுவோம் என்று கூறினார்.
Average Rating