வீராங்கனை குற்றச்சாட்டு: காதல் புகாரில் இருந்து கைப்பந்து வீரர் விடுவிப்பு!!
பெங்களூரைச் சேர்ந்த சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா. சக வீரரான நவீன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரது மகளுடன் அவருக்கு நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தும்படியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் துணை கமிஷனர் ஷியாமளா விசாரணை நடத்தினார்.
பிரியங்கா – நவீன் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
புகாருக்குள்ளான நவீன் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்து தி.நகரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்த மாம்பலம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலா, மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று அதிகாலையில் நவீனை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நேற்று மாலையில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவீன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், காதலித்து ஏமாற்றுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக நேற்று மாலையில் நவீன் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, பிரியங்கா அளித்த புகாரின் பேரில் நவீன்ராஜாவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் அவரை கைது செய்யவில்லை. பிரியங்கா புகாரின் அடிப்படையில் இன்னும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது. மீண்டும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
இன்று மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, பிரியங்காவிடமும், நவீனிடமும் விசாரணை நடத்த உள்ளார். அதன் பிறகே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது தெரிய வரும்.
Average Rating