உடுமலை அருகே உயிருடன் இருப்பவர் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!!
உடுமலை அருகேயுள்ள புக்களத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38). அந்த பகுதியில் உள்ள மில்லில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிவகுமார் இறந்து விட்டதாக அந்த பகுதியில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த சிவகுமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். ‘நன்றாகத்தானே இருந்தார். அதற்குள் என்ன ஆனது?’ என்று கனத்த இதயத்தோடு சிவகுமாரின் வீட்டுக்கு வந்தனர்.
ஆனால் வீட்டில் சிவகுமார் வேலைக்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த உறவினர்களுக்கு ஒரு வகையில் ஆனந்தம். அவர்கள் கண்ணை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.
என்ன எல்லோரும் ஒரே நேரத்தில் திரண்டு வந்திருக்கிறீர்கள்? என்று சிவகுமார் அவர்களிடம் கேட்டபோது தான் ஊரில் சிவகுமார் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் விவரத்தை கூறினார்கள்.
அதிர்ந்து போன அவர் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லையே. அப்படி என் மீது அவர்களுக்கு என்ன? கோபம் என்று தேம்பி தேம்பி அழுதார்.
பின்னர் உடுமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தவமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
உயிரோடு இருப்பவர் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating