உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வருடங்களில் 57 பேரை கொலை செய்த கொடூர கொலைகாரனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மாநிலத்தில் உள்ள பெரேய்லி நகர போலீசார் வழிப்பறி கொள்ளை தொடர்பாக 26 வயது சல்மான்கானை கைது செய்தனர். இதையடுத்து அவனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் தங்களது வழக்கமான பாணியில் விசாரித்தனர். அப்போது 10 வருட காலத்தில் 57 கொலைகளை செய்துள்ளதாக அவன் கூறிய தகவல், போலீசாரையும் தூக்கி வாரி போடச்செய்தது. தனது 16 வயதில் முதல் கொலைகளை செய்த அவன், பின்னர் தனக்கென தனி கூட்டத்தை வைத்துக்கொண்டு ரோஹில்கண்ட் பகுதியில் சைமர் கேங்கின் தலைவனாக விளங்கியுள்ளான்.
அதன் பின் அம்மாநிலத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரியான அசிட் ஸ்ரீ வத்சவா கூறுகையில், அவனை விசாரிக்க ஆரம்பித்தவுடன், எவ்வளவு கொடூரமான செயல்களை அவன் செய்துள்ளான் என்பது தெரிய வந்தது. இப்பகுதியில் உள்ள பெரேய்லி, பதான், பிலிபிட், கன்னாஜ், ஷாஜகான்பூர், கான்பூர் மற்றும் ஹர்டொய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சல்மான் கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளான் என அதிர்ச்சி தரும் தகவலை கூறினார்.
முதலில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்த அவன், கொள்ளை நடக்கும் வீடுகளில் உள்ளவர்களை இரக்கமே இல்லாமல் கொன்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளான். இது போல் 50 முறை கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக அவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் தன்னை போல் செயல்படும் பல்வேறு கொலை கும்பல்கள் குறித்தும் சல்மான் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளான். இதை வைத்து அந்த கும்பல்களையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Average Rating