ஈபிடிபி முக்கியஸ்தர் அன்ரி காலமானார்..!
ஈபிடிபியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் மாதர் அணி அமைப்பாளருமான திருமதி கந்தசாமி சற்குணவதி அவர்கள் காலமானார். ஈழத்தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் நீண்ட கால பங்குபற்றலை வெளிப்படுத்திய கந்தசாமி சற்குணவதி அவர்கள் முன்னைய ஈ.பி.ஆர்.எல.எப் காலகட்டத்தில் கல்வயல் அக்கா எனவும் ஈபிடிபியின் ஸ்தாபன நாள் முதற்கொண்டு இற்றைவரை அன்ரி எனவும் கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் மதிப்புடன் அழைக்கப்பட்டு வந்தவராவார். தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் ஆயுதவழி போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் கண்ணனின் துணைவியாராகிய அன்ரி அவர்கள் அன்றிலிருந்தே தனது பங்களிப்பினை வழங்கி வந்த ஒருவராவார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் தன்னை மட்டுமல்ல தன்குடும்பத்தையே இணைத்துக் கொண்ட அன்ரி அவர்கள் இன்று அதிகாலை மரணமடையும் வரை முழு மூச்சுடன் செயற்பட்டு வந்த ஓர் துடிப்பான பெண்மணியாவார். -EPDP