மோடியைக் கவர்ந்த அதிசய கிராமம்: பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்க வீடுதோறும் பெயர்ப் பலகைகள்!!
அரியானாவின் பல பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் பெண் குழந்தையின் பெயர், ஈமெயில் முகவரி அடங்கிய பெயர் பலகை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது செல்பி வித் டாட்டர்ஸ். இந்த செல்பி ஐடியா பட்டி தொட்டி வரை வைரலாக பரவி வருகிறது. கிராமங்களில் வசிக்கும் பலரும் தங்கள் பெண் குழந்தைகளுடன் செல்பி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், தமது மகளுடன் செல்பி எடுத்து வெளியிட்டிருந்தார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற மோடியின் அறிவிப்பு அரியானாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள பிபிபூர் என்ற கிராமத்தினர் சிலர், பெண் குழந்தைகளின் பெயர், ஈமெயில் அடங்கிய பெயர் பலகையை தங்களின் வீடுகளின் முகப்பில் பொருத்தினர்.
இது குறித்து அறிந்த பிரதமர் மோடி, கிராம மக்களின் சிந்தனையை வெகுவாக பாராட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பெயர் பலகைகள் இல்லாத வீட்டில், அங்கு வசிக்கும் குடும்பத்தினரின் அனுமதியுடன் பெயர் பலகைகளை பொருத்தி வருகின்றனர்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “என் குழந்தையின் பெயர் மற்றும் ஈமெயில் அடங்கிய பெயர் பலகை வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நடவடிக்கை பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்கும்” என்றார்.
பெயர் பலகைக்காக ஆகும் முழு செலவையும் பஞ்சாயத்து நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating