மதுரையில் பெண் தகராறில் வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை!!
மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திக் (வயது22). ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தின் அருகே கத்திகுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இது குறித்து கூடல்புதூர் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
கார்த்திக் கிரிக்கெட் தீவிர ரசிகர். எனவே அப்பகுதியில் யாராவது கிரிக்கெட் விளையாடினால் அவர்களுடன் சேர்ந்து இவரும் விளையாடுவதுண்டு. கடந்த மாதம் அவரும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (22) கொத்தனார் பொன்ராஜ் (21), கார்த்திக் ஆகிய 3 பேரும் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கு நின்றவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தின் அருகே கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த முருகன், பொன்ராஜ் ஆகியோர் கார்த்திக்கிடம் ஏதோ பேசினர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கார்த்திக்கை மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் கார்த்திக் சாய்ந்து விழுந்ததும் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர் என முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் முருகன் விரும்பிய பெண்ணை கார்த்திக் விரும்பியதாகவும், இதனால் முருகனுக்கும், கார்த்திக்குக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் முருகன், பொன்ராஜ் ஆகிய இருவரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள்.
Average Rating