கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!
கன்னியாகுமரி அகே உள்ள கொட்டாரம் ஆறுமுகபுரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (65). இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் அனைவரும் தனி குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் செல்லையா தனது மனைவியுடன் ஆறுமுகபுரத்தில் தனியாக வசித்து வந்தார். செல்லையா கூலி தொழில் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
சமீபத்தில் வயது மூப்பு காரணமாக செல்லையாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வருமானம் இல்லாமல் அவர் வறுமையில் வாடும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் செல்லையாவும் அவரது மனைவி ராஜம்மாளும் மன வேதனையுடன் நாட்களை கடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் செல்லையா வீட்டிற்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றபோது அங்கு கணவன்– மனைவி இரண்டு பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த தகவலை அவர் அக்கம் பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது செல்லையாவும், ராஜம்மாளும் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது.
உடனே அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது ராஜம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. செல்லையா கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே செல்லையாவை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
ராஜம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது உடல்நலம் பாதிப்பு மற்றும் வறுமை காரணமாக செல்லையாவும், ராஜம்மாளும் விஷம் குடித்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating