சில்லறைத் தட்டுப்பாடு: சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ. 6 கோடி நாணயங்கள்!
தமிழகத்தில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 6 கோடி மதிப்பிலான நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ெபரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக 50 பைசா, ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும், மற்றவர்களும் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். 50 பைசா மற்றும் 25 பைசா நாணயங்களை பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு அது மாயமாகியுள்ளது. அதேபோல ஒரு ரூபாய் நாணயமும் கூட பற்றாக்குறையாகி வருகிறது. இந்த நிலையைப் போக்க மத்திய ரிசர்வ் வங்கி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டு விட்டன. இவை 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 பைசா நாணயங்கள் எங்குமே இல்லை என்பதால் அது செல்லாது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. கடந்த 3 வருடங்களாக ஐந்து ரூபாய் தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு நாணயங்களாக வெளியாகிக் கொண்டிருப்பதால், ஐந்து ரூபாய் தாள்கள் குறைந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைத் தபால் நிலையம், அண்ணா சாலை தலைமைத் தபால் நிலையம் உள்ளிட்ட சில முக்கிய தபால் நிலையங்களில் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து நாணயங்களாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் கூட சில்லறைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.