போலீசாரால் கற்பழிக்கப்பட்ட புதுவை சிறுமி திடீர் மாயம்!!
புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த ஆண்டு ஒரு விபசார கும்பல் சிக்கியது.
விபசார கும்பலிடம் இருந்து 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்று இருந்தாள். இதனையடுத்து விபசார கும்பலிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த சம்பவத்தில் 2 இன்ஸ்பெக்டர், ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கில் தொடர்பு உடைய இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 8 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்–இன்ஸ்பெக்டர் அனுஷா பாஷா, ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராம், ஏட்டு குமாரவேல் ஆகிய 4 போலீசார் தலைமறைவாக உள்ளனர்.
தலைமறைவாக உள்ள போலீசாரை சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் புதுவை தவளகுப்பத்தை அடுத்த கொருக்குமேடு கிருபாலயம் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தாள். அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திடீரென மாயமானாள்.
காப்பக பொறுப்பாளர் சந்தியா இரவு பதிவேட்டை சரிபார்த்தபோது சிறுமி மாயமானது தெரியவந்தது. காப்பகம் சார்பில் தவளகுப்பம் போலீசில் சிறுமி மாயம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான சிறுமி மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை யாரேனும் கடத்தி சென்று இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையில் உறவினர் என கூறி போலீஸ்காரர் ஒருவர் அடிக்கடி காப்பகத்தில் அந்த சிறுமியை சந்தித்து உள்ளார். இதனால் சிறுமி மாயத்தில் அந்த போலீசாருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு அண்ணா சாலையில் ஒரு தங்கும் விடுதியில் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டனர். அவள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது திடீரென மாயமானார். இதுவரை அவள் என்ன ஆனாள் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating