தமிழகத்திற்கு இலங்கை முக்கியத்துவம்: புலிகள் ரகசிய இடத்தில் குண்டுவீச்சு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, தமிழகமும் கருத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இதற்கிடையே, புலிகளின் உளவுப் பிரிவினர் வழக்கமாக கூடும் இடத்தில் இலங்கை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசின. சமீப காலமாக இல்லாத அளவுக்கு இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருப்பதாக இலங்கை ராணுவத்துறை செயலர் கொடபயா ராஜபக்சே கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா உதவ முடியும் என்பதை இலங்கை உணர்ந்துள்ளது. இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, ஆறு கோடி தமிழர்களை கொண்டுள்ள தமிழகமும் கருத்தில் கொள்ளப்படும். புலிகளுக்கு எதிரான போரில், அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. இந்தியா ஏற்கனவே இரண்டு ரேடார்களை அனுப்பி உள்ளது. புலிகளின் சமீபத்திய விமான தாக்குதல்களை கண்காணிக்க அவை பெரிதும் உதவிகரமாக உள்ளன. இவ்வாறு ராஜபக்சே கூறினார். இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மன் உள்ளிட்ட உளவுப்பிரிவினர் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்தும் இடத்தில் இலங்கை விமானப்படை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. கடுநயகே விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள், இலங்கையின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட இலக்கு துல்லியமாக தாக்கப்பட்டதாகவும், புலிகள் தரப்பில் பலியானோர் விவரம் தெரியவில்லை என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.