சிறுவனை மதுகுடிக்க வைத்த வாலிபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன், ஏழுமலை, பிரேம்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் அந்த பகுதியில் உள்ள மிருகண்டா அணைக்கு அருகே கடந்த 30–ந்தேதி மது குடித்தனர்.
போதை தலைக்கேறியதும் முருகன் தன்னுடன் அழைத்து சென்ற தனது சகோதரியின் 4 வயது மகனுக்கு மது கொடுத்து குடிக்க வைத்தார். இதை போதை கும்பலில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சக நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார்.
வாட்ஸ்அப்பில் வெளியான இந்த காட்சியை பார்த்து பலரும் அதிர்ந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து போளூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வாட்ஸ்அப்பில் வந்த காட்சியில் பதிவான மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து அதன் உரிமையாளரான மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரை மடக்கினர். அவர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியில் வேலைபார்த்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வரும் ஆனந்தன், ஈஸ்வரி தம்பதியின் 4வயது மகன் ஆவான். சம்பவத்தன்று மேல்சோழங்குப்பத்தில் பாட்டி வீட்டில் இருந்தான். அப்போது தான் அவனை தாய் மாமன் முருகன் அழைத்து சென்று மது குடிக்க வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஏழுமலை (23), பிரேம்குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தாய்மாமன் முருகன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
இவர்கள் 5 பேர் மீதும் ஒன்று கூடி சட்டவிரோத செயலில் ஈடுபட்டது, குழந்தையை கடத்தியது கொலை முயற்சி, குழந்தைக்கு போதை தரும் பொருட்களை கொடுத்தல் மற்றும் இளம் சிறார் நீதி (குழந்தைகளின் பாதுகாப்பு பராமரிப்பு), ஆகிய 6 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
Average Rating