கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!!
கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரு படகில் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு நான்கு மீனவர்களை பாதுகாப்பாக ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர். மாயமான படகு மற்றும் நான்கு மீனவர்களை தேடி ஒரு குழுவினர் இன்று கடலுக்கு செல்கின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மதியழகன், செழிக்கான் ஆகியோரது இரண்டு படகில் எட்டு மீனவர்கள் அக்.27ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கரை திரும்பவில்லை. மதியழகன் படகில் பழுது ஏற்பட்டதால், கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். நேற்று மாலை கரைக்கு வந்த மீனவர்கள் பன்னீர்(35), ஜோசப்(36), காளி(27), முருகன்(27) கூறுகையில், “கடலில் மீன்பிடிக்கும் போது படகில் பழுது ஏற்பட்டது. காற்றால் கச்சத்தீவு பகுதிக்கு சென்று விட்டோம். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களை காப்பாற்றி உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாக வேறு மீனவர்களுடன் அனுப்பி வைத்தனர்’ என்றனர். செழிக்கானின் படகில் சென்ற மீனவர்கள் சண்முகம்(40), ராஜாபாண்டி(30), பெரியசாமி(40), முனியசாமி(35) ஆகியோர் கரை திரும்பவில்லை. இவர்கள் தலைமன்னார் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்க இன்று காலை மீனவர்கள் தனி படகில் தலைமன்னார் பகுதி செல்கின்றனர்.